வியாழன், 1 மார்ச், 2012

தவமாய் தவமிருந்து



எத்துனை காத்திருப்பு எத்துனை எதிர்பார்ப்பு
எத்துனை ஏக்கம் எத்துனை தவிப்பு 
எத்துனை தவமடா உன் முகம் காண
நீ கருப் புகுந்த நாள் முதல் உன்
அன்னையவள், பொறுத்த வலி தான் எத்தனை எத்தனை

பிடித்ததை உண்ணவும் முடியாது
உண்டதை செரிக்கவும் முடியாது
வாயிலெடுத்த உபாதையால்
வந்த தலைவலியும் தீராது
ஊன் கெட்டு உறக்கம் கெட்டு
முகம் வெளிறி, நடை தளர்ந்து,
எடை கூடி, கையும் காலும் வீங்கி
ஒரு புறம் மட்டுமே படுத்து
இதற்கும் மேலாய் விலா முறிக்கும்
இடை வலி பொருத்து, உயிர் இறுத்து
இறுதியாய் பிரசவித்தாள் உன்னை

அன்னை கொண்ட அத்துனை வலியும்
தந்தையும் மனதால் கொண்டேனடா
தாய் கொண்ட வலி ஊர் அறியும்
தகப்பன் கொள்ளும் வலி யார் அறிவார்?

அத்துனை வலியும், அத்துனை தவிப்பும்
உனைக்கண்ட நொடியில் நெடுதவம்
ஒன்றின் நிறைவாய், இறையே எம்முன் தோன்றி
அருளாய் சொரிந்தார் போல
தேகம் உறைந்து கண்கள் பணித்து
நின்றேனே என் அய்யனே..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக